World Largest Curd Plant - பிரபல அமுல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி மையத்தை கொல்கத்தாவில் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குஜராத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல அமுல் நிறுவனம் உலகளாவிய அளவில் பால் சம்மந்தப்பட்ட பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து இயங்கி வரும் அமுல் நிறுவனம், கடந்த வருடம் மட்டும் 80,000 கோடி வருமானத்தை ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தமட்டில் அமுல் தான் டாப் பால் நிறுவன உற்பத்தியாளராக இருக்கிறது, உலகளாவிய அளவில் டாப் 50 குளோபல் டெய்ரி பிராண்டுகளில் இந்திய நிறுவனங்களுள் அமுல் மட்டுமே இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது, அமுல் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு என்பது உலகளாவிய அளவில் 3.3 பில்லியன் டாலராக இருக்கிறது.
சரி தற்போது அமுல் நிறுவனம் கொல்கத்தாவில் கட்டமைக்க இருக்கும் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி மையம் குறித்து பார்க்கலாம், இந்த பிராஜக்ட் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் சாங்ரெயில் புட் பார்க்கில் அமைய இருப்பதாக தகவல், இதற்காக அமுல் நிறுவனம் 600 கோடி வரை தனியாக ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த புதிய நிறுவனம் செயலாக்கத்திற்கு வரும் பட்சத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் வரை தயிர் தயாரித்து சந்தைப்படுத்த முடியுமாம், இது அமுல் ஏதும் சாதனையை நிகழ்த்த வேண்டும் என துவங்கப்பட்ட நிறுவனம் அல்ல, கிழக்கு இந்தியப் பகுதிகளில் வசிக்கும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் துவங்கப்பட இருப்பதாக அமுல் கூறி இருக்கிறது.